வெள்ளி, 1 ஜூலை, 2011

விரைவில் நமக்கான அரசு வேலை வாய்ப்பு திடடம்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட்டில் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




தி.மு.க., ஆட்சியின் போது, வேலை இல்லாத இளைஞர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதற்காக, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யூ.ஒய்.இ.ஜி.பி.,), 2010, ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், உற்பத்தி பிரிவுக்கு, 5 லட்ச ரூபாய், சேவைப் பிரிவுக்கு, 3 லட்ச ரூபாய், வியாபாரத்திற்கு, 1 லட்ச ரூபாய், வங்கியில் கடன் வழங்க வழி செய்யப்பட்டது. அரசு சார்பில், 15 சதவீத மானியம் வழங்கப்பட்டது. இத்திட்டம், மிகக் குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பட்டாலும், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதுவரை, 1,200க்கும் மேற்பட்ட பயனாளிகள், மானியத்துடன் கூடிய, வங்கிக் கடன் பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், 200க்கும் மேற்பட்டோருக்கு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில் தேர்தல் வந்தது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் தொழில் துவங்க, 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்போது நடைமுறையில் உள்ள, "வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' என்ற பெயரை, "முதலமைச்சர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இத்திட்டத்தில், ஏற்கனவே வழங்கப்படும் கடன் தொகையின் உச்ச வரம்பை, உற்பத்தி பிரிவுக்கு, 10 லட்ச ரூபாய், சேவைப் பிரிவுக்கு, 5 லட்ச ரூபாய் மற்றும் வியாபாரத்திற்கு, 3 லட்ச ரூபாய் என உயர்த்தி வழங்குவதுடன், மானியத் தொகையை, 25 சதவீதம் உயர்த்தி வழங்கினால், மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்.

தாலிக்கு தங்கம், இலவசமாக, 20 கிலோ அரிசி, முதியோர் உதவித் தொகை அதிகரிப்பு, செப்டம்பரில், முதல் கட்டமாக, 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, 9 லட்சத்து, 12 ஆயிரம் மாணவர்களுக்கு, இலவச,"லேப்-டாப்' என, தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழக அரசு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டத்தையும் கொண்டு வர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

0 கருத்துகள்: